நாட்டின் பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், 2026ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பெறுவோருக்கான விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
இந்த விழாவில், இந்திய திரைப்படத் துறையில் பல தசாப்தங்களாக சிறப்பான சாதனைகளைப் படைத்து வரும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்மூட்டிக்கு, இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம பூஷண் விருதை வழங்கி கவுரவித்தார்.
அதே நிகழ்ச்சியில், இந்திய திரையிசை உலகின் பிரபல பின்னணிப் பாடகியான அல்கா யாக்னிக்கும் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. மேலும், புகழ்பெற்ற மலையாள பத்திரிகையாளர் பி. நாராயணன் மற்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மம்மூட்டி பத்ம பூஷண் விருது பெற்றிருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

