Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“கலாச்சாரம் உடையில் இல்லை; உணர்வில்தான் உள்ளது!” – கங்கனாவின் விமர்சனத்துக்கு கிருத்தி சனோன் பதிலடி

Kriti Sanon Responds to Kangana Ranaut’s Criticism

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கிருத்தி சனோன், தனது ஆடைத் தேர்வு குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு அளித்துள்ள பதில் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

சமீபத்தில் நகைக்கடை ஒன்றின் ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் கிருத்தி சனோன் அணிந்திருந்த ஆடை தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்திய பாரம்பரிய பண்டிகையான ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் இதுபோன்ற ஆடை பொருத்தமானதல்ல என சிலர் கருத்து தெரிவித்தனர்.

இதனிடையே, பாலிவுட் நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத், கிருத்தியின் ஆடைத் தேர்வை விமர்சித்திருந்தார். சகோதரருக்கு ராக்கி அணிவிக்கும் நிகழ்வில் இதுபோன்ற ஆடையை அணிவது சரியா என்றும், பெண்களுக்கு விருப்பமான ஆடைகளை அணியும் சுதந்திரம் இருந்தாலும் சில எல்லைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கங்கனாவின் விமர்சனத்திற்கு கிருத்தி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் பதிலளித்துள்ளார்.

அதில், “ஒரு பண்டிகையின் சாராம்சம் நாம் அணியும் உடையில் இல்லை; அந்த பாரம்பரியத்திற்கு நாம் அளிக்கும் அர்த்தத்திலும் உணர்விலும்தான் உள்ளது. ரக்ஷா பந்தன் என்பது பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட உறவு. நானும் எனது சகோதரியும் ஒருவருக்கொருவர் ராக்கி கட்டிக்கொள்கிறோம். சகோதரர் வழங்கும் பாதுகாப்பைப் போலவே, நாங்களும் ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்ள முடியும் என நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்கள் அணியும் ஆடைகளை வைத்து அவர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான மரியாதையை மதிப்பிடுவது சரியல்ல என்றும் கிருத்தி குறிப்பிட்டுள்ளார்.

“பெண்கள் என்ன அணிய வேண்டும் என்று சொல்வதை நாம் எப்போது நிறுத்தப் போகிறோம்? காலத்திற்கு ஏற்ப பாரம்பரிய உடைகளின் பாணியிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இன்றும் ஒரு பெண்ணின் ஆடையை வைத்தே அவரது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான மரியாதை அளவிடப்படுகிறது. பண்பாடும், பாரம்பரியமும் ஒரு பெண்ணின் மனதில் இருக்கிறதே தவிர, அவளது ஆடையில் அல்ல” என கிருத்தி சனோன் தெரிவித்துள்ளார்.