கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் சேதுமாதவன். மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனரான இவர் சென்னையில் வசித்து வந்தார். 90 வயதான சேதுமாதவன் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். இயக்குனர் சேதுமாதவனுக்கு மனைவியும் 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
மலையாளத்தில் பல படங்களை இயக்கிய சேதுமாதவன் தமிழில் சிவகுமார்-ராதா நடித்த மறுபக்கம் படத்தை இயக்கினார். இப்படம் தேசிய அளவில் சிறந்த சினிமாவுக்கான விருதை பெற்றது. மலையாள சினிமாவில் நடிகர் கமல்ஹாசனை இவர்தான் அறிமுகம் செய்தார். 1962-ம் ஆண்டு கண்ணும் காராளும் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார்.
இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சேதுமாதவன் மறைவிற்கு நடிகர் கமல் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம். மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர். தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூறப்படுவார். என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள்’ என்று பதிவு செய்து இருக்கிறார்.
காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர்.தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள். pic.twitter.com/CXPcyVuMDA
— Kamal Haasan (@ikamalhaasan) December 24, 2021

