தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் 170-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், 15-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தும் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர் மூத்த நடிகர் மோகன் சர்மா. தமிழில் அக்கரை பச்சை, பிரண்ட்ஸ், பார்த்திபன் கனவு, பிரியமான தோழி, சச்சின் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார். குறிப்பாக விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவின் தந்தையாக நடித்தது ரசிகர்களின் நினைவில் உள்ளது.
80 வயதை கடந்துள்ள மோகன் சர்மா தற்போது கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் இலவச தங்குமிடம் மற்றும் உணவு வசதியுடன் வசித்து வருவதாகவும், பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய மருந்துகளைக் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த தகவலை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், மோகன் சர்மாவுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது வாழ்க்கையை நினைவுகூர்ந்த மோகன் சர்மா, ஒருகாலத்தில் சென்னையின் போயஸ் கார்டனில் சொந்த வீடு வைத்திருந்ததாகவும், பின்னர் வாழ்க்கைச் சூழ்நிலையால் அதை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறினார்.
மேலும், தேசிய விருதுகள் பெற்ற தனது நம்ம கிராமம் திரைப்படத்தை பார்த்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா மிகவும் நெகிழ்ந்து, ஜெயா டிவிக்காக அதன் ஒளிபரப்பு உரிமையைப் பெற விருப்பம் தெரிவித்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.
திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் தொடர்ந்து பணியாற்றியபோதும், தனிப்பட்ட வாழ்க்கையில் பல வேதனைகளை சந்தித்ததாகவும், இன்று தன்னை கவனித்துக்கொள்ள நெருங்கிய உறவினர்களோ நண்பர்களோ இல்லாத நிலை தனது முதுமையை மிகவும் சவாலாக மாற்றியுள்ளதாகவும் மோகன் சர்மா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

