72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல் உள்நோக்கம் குறித்த விமர்சனங்களுக்கு அவரது தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா பதிலளித்துள்ளார்.
தனுஷிற்கு விருது கிடைத்தது மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக தெரிவித்த அவர், “அவரது பயணம், முயற்சி மற்றும் திறமைக்காகவே இந்த விருது கிடைத்துள்ளது. தேசிய விருதுகள் தேர்வுக் குழுவின் முடிவின் அடிப்படையில்தான் வழங்கப்படுகின்றன. இதில் எந்த அரசியல் நிலைப்பாடும் இல்லை” என்றார்.
மேலும், “தனுஷை விட பெரிய நடிகர்கள் தமிழ்நாட்டில் இல்லையா? அவர்கள் ஏன் குழுவை ஆதிக்கம் செலுத்தி விருதுகளை வாங்கவில்லை. இது அரசு மற்றும் தேர்வுக் குழு எடுக்கும் முடிவு” எனக் கேள்வி எழுப்பினார்.
விருதுக்காக தனுஷ் யாரையும் அணுகும் நபர் அல்ல என்றும், ஏற்கனவே ‘அசுரன்’ மற்றும் ‘ஆடுகளம்’ படங்களுக்காக அவர் தேசிய விருதுகளை பெற்றுள்ளதாகவும் கஸ்தூரி ராஜா தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மம்மூட்டி பெற்றிருக்கும் நிலையில், தனது மகன் தேசிய விருது பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம் என்றும் அவர் கூறினார்.
தனுஷ் நடித்த ‘ஹபீபி’ திரைப்படம் குறித்து பேசிய அவர், “அது ஒரு மதத்தை சார்ந்த படம் அல்ல; அப்பா, அம்மா, அண்ணன், தம்பி என ஒரு கூட்டுக் குடும்பத்தின் வாழ்க்கையை சொல்லும் படம். அந்த படத்திற்கு விருது கிடைத்தால், அதன் பெருமை இயக்குநர் மீரா கதிரவனை சேரும்” என தெரிவித்தார்.

