தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். வெளிநாடுகளில் வசிப்பவர்களும் வாக்களிப்பதற்காக இந்தியா திரும்புவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த ஒரு விமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலோர் வாக்களிக்க வந்ததாக கூறப்படும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், நடிகரும் ரேசருமான அஜித் குமார், தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற சென்னை திரும்பியுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அஜித் குமார் அண்மையில் பெல்ஜியத்தில் நடைபெற்ற உலகின் மிகவும் சவாலான கார் பந்தயங்களில் ஒன்றான 24H Series போட்டியில் தனது அணியுடன் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்த சாதனைக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அத்தகைய முக்கியமான சர்வதேச போட்டிக்குப் பிறகும், தனது வாக்குரிமையை பயன்படுத்துவதற்காக சென்னை திரும்பியுள்ள அஜித் குமார், ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளார். ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்த செயல், பலருக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
Mass isn’t created, it arrives like this🔥#Thala #Ajithkumar #Ak pic.twitter.com/YXIrLDUG7v
— raahul (@mynameisraahul) April 22, 2026

