சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’. தமிழ் சினிமாவில் இடம்பெறும் வழக்கமான காட்சிகள் மற்றும் திரைப்பட பாணிகளை நகைச்சுவையாகக் கிண்டல் செய்து உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதன் தொடர்ச்சியாக 2018-ம் ஆண்டு ‘தமிழ் படம் 2’ வெளியானது. இப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘தமிழ் படம் 3’ எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து இருந்து வந்தது.
இந்நிலையில், ‘தமிழ் படம் 3’ குறித்த முக்கிய அப்டேட்டை நடிகர் சிவா தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம், ‘தமிழ் படம் 3’ படத்தின் பணிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சிவா, தற்போது படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்கத் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், படத்திற்கான பணிகள் அனைத்தும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிவாவின் இந்த தகவலால் ‘தமிழ் படம் 3’ மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

