Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் உருவாகிவிட்டதா? அறந்தாங்கி நிஷா ஆவேசம்

Aranthangi Nisha Expresses Outrage Over Shocking Incident

கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாக வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பாக மருத்துவர்கள் தெரிவித்த தகவல்கள் பொதுமக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குழந்தையின் உடலில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்ததாகவும், கடுமையான காயங்கள் காரணமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நடிகையும் நகைச்சுவை கலைஞருமான அறந்தாங்கி நிஷா தனது சமூக வலைத்தளப் பதிவின் மூலம் கடும் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், “இந்த சம்பவத்தை பற்றி பேசுவதற்கே வார்த்தைகள் இல்லை. ஒரு பெண் குழந்தை என்ற காரணத்தால் இத்தகைய கொடுமைக்கு ஆளாக வேண்டிய நிலை மிகவும் வேதனை அளிக்கிறது. அந்த குழந்தைக்கு இரங்கல் தெரிவிக்கக் கூட வார்த்தைகள் கிடைக்கவில்லை. பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் உருவாகிவிட்டதா என்ற கேள்வி மனதை உலுக்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெண்களின் பாதுகாப்பு குறித்து சமூகமும் அதிகார அமைப்புகளும் தீவிரமாக சிந்திக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் தனது பதிவில் வேதனை தெரிவித்தார்.

அறந்தாங்கி நிஷாவின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனையும் விரைவான நீதியும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி சிறுமி உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.