இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் (சிம்பு) நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அரசன்’. பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திறந்தவெளி அரங்கில், வடசென்னையின் இயல்பான சூழலை தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. சிம்புவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றாக ‘அரசன்’ உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்திய நேர்காணலில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, சிம்புவின் அர்ப்பணிப்பு குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவிருந்த படத்திற்காக சுமார் ஓராண்டு காலமாக தலைமுடியை வளர்த்திருந்த சிம்பு, ‘அரசன்’ படத்தின் கதையை கேட்டவுடன் அந்த திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து, இந்தக் கதாபாத்திரத்திற்காக தனது தோற்றத்தை முழுமையாக மாற்றிக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், படப்பிடிப்பின் போது சிம்பு கதாபாத்திரமாகவே வாழ்ந்ததாகவும், படப்பிடிப்பு தளத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து தயாராக இருப்பதாகவும் தாணு கூறினார். அவரது தொழில்முறை அர்ப்பணிப்பு வெற்றிமாறனையும் கவர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், இந்தப் படத்திற்கான இசையமைப்பாளராக அனிருத் இருக்க வேண்டும் என்பது சிம்புவின் தனிப்பட்ட விருப்பமாக இருந்ததாகவும் தாணு தெரிவித்தார். “இந்தக் கதைக்கும் அதன் உலகத்திற்கும் அனிருத்தின் இசை மிகச் சரியாகப் பொருந்தும் என்று சிம்பு நம்பினார். அவரது கோரிக்கையை இயக்குநர் வெற்றிமாறனும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்” என அவர் கூறினார்.
மூன்று மாதங்களுக்குள் படப்பிடிப்பை நிறைவு செய்து, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ‘அரசன்’ திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

