ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல்வேறு தாமதங்களுக்கு பிறகு கடந்த மே 15-ஆம் தேதி வெளியான இப்படம், முதல் ஆறு நாட்களிலேயே ரூ.207 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் நிலையில், நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
“‘கருப்பு’ படத்திற்கு கிடைத்து வரும் அன்பால் நாங்கள் மிகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளோம். சூர்யா எப்போதும் வலுவான கதைகளைக் கொண்ட படங்களில் நடிக்க விரும்புகிறார். ஒவ்வொரு படத்திலும் சொல்ல வேண்டிய ஒரு கருத்தும், கதையும் இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பார். அதே நேரத்தில், ஒரு நடிகருக்கு வசூல் வெற்றியும் முக்கியமானது.*
*‘கருப்பு’ ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருந்தாலும், தொடக்கம் முதல் முடிவு வரை விறுவிறுப்பான கதையோட்டத்தை தக்கவைத்திருக்கிறது. இதில் சூர்யா ஏற்றுள்ள தெய்வீகத் தன்மை கொண்ட கதாபாத்திரம், அவரது வழக்கமான வேடங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.
குறிப்பாக படத்தின் கடைசி 10 நிமிடங்களில் சூர்யாவின் நடிப்பு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. படத்திற்கு கிடைத்து வரும் வெற்றியையும், ரசிகர்கள் கொண்டாடும் உற்சாகத்தையும் பார்க்கும்போது எங்களுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஏற்படுகிறது” என்றார்.
‘கருப்பு’ திரைப்படத்தின் தொடர்ச்சியான வசூல் சாதனைகளும், ரசிகர்களின் உற்சாகமான வரவேற்பும் படக்குழுவினருக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.

