சமூகப் பார்வையும் யதார்த்தமான கதைக்களங்களும் கொண்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், தற்போது தயாரிப்பாளராக புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன் காளமாடன்’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற மாரி செல்வராஜ், தனது முதல் தயாரிப்பு முயற்சியாக புதிய படமொன்றை உருவாக்க உள்ளார். இந்தப் படத்தை அவரது உதவி இயக்குநரான அரவிந்த் இயக்கவுள்ளார்.
இப்படத்தில் நடிகர் அமீர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதுடன், நடிகை ஸ்வஸ்திகா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் படத்தின் பூஜை விழா எளிமையாக நடைபெற்றுள்ளது.
மேலும், இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களின் ஒரு பகுதியை மாரி செல்வராஜே எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த புதிய கூட்டணியின் படைப்பை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படக்குழுவின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

