தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படமான “பெத்தி” படத்தின் எடிட்டிங் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம், வரும் ஜூன் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், பலமுறை வெளியீட்டு தேதியில் மாற்றங்களை சந்தித்த பின்னர் தற்போது இறுதியாக ஜூன் 4 வெளியீட்டை உறுதி செய்துள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில், ராம் சரண் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். உள்ளூர் விளையாட்டு பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்திற்காக அவர் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு தனது உடல் தோற்றத்தை மாற்றியிருந்தார். அந்த புகைப்படங்கள் வெளியாகியபோது ரசிகர்கள் அவரை “இந்தியாவின் ஹல்க்” என கொண்டாடினர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியாகியுள்ள “சிக்கிரி” பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட்டாகியுள்ளது.
மேலும் இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் மற்றும் நடிகை ஜான்வி கபூர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தற்போது படத்தின் எடிட்டிங் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், “பெத்தி” திரைப்படத்தை ஜூன் 4 முதல் ரசிகர்கள் திரையரங்குகளில் காணலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.


