Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகர்களின் கால்ஷீட் இல்லை….. இந்தியன்-2 மீண்டும் தொடங்குவதில் சிக்கல்?

indian 2

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். 22 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க கமல், ‌ஷங்கர் இருவரும் திட்டமிட்டனர். லைகா நிறுவனம் தயாரிக்க படப்பிடிப்பு தொடங்கியது. கமலுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தமானார்கள். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கியது.

பாராளுமன்ற தேர்தலில் கமல் பிரசாரம் காரணமாக இடையில் சிலகாலம் தடை பட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி 1-ந் தேதி படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். படப்பிடிப்பில் நடந்த இந்த திடீர் விபத்து காரணமாக படப்பிடிப்பு முழுமையாக பாதிக்கப்பட்டு பாதியில் நிற்கிறது. இந்த விபத்து காரணமாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நடைபெற்று வருகிறது. ‌ஷங்கர், கமல்ஹாசன் இருவரையும் விசாரித்தது பரபரப்பானது.

இவர்கள் தவிர விபத்து நடந்தபோது படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இயக்குனர், தயாரிப்பாளர், ஹீரோ உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடப்பதால் படப்பிடிப்பை குறிப்பிட்ட தேதியில் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே விபத்துக்கு தயாரிப்பு நிறுவனம் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று லைகாவுக்கு கமல்ஹாசன் கடிதம் எழுத அதற்கு லைகா நிறுவனம், இயக்குனரும், ஹீரோவும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பதில் கடிதம் அனுப்பியது. இதனால் கமலுக்கும் லைகா நிறுவனத்துக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் பரவுகிறது.

ஏற்கனவே நடிகர், நடிகைகளிடம் பெறப்பட்ட கால்ஷீட் தேதி முடிந்துவிட்டதால் மீண்டும் அவர்களிடம் புதிதாக கால்ஷீட் பெற்று அதை முறைப்படுத்திய பிறகே முழுமையான படப்பிடிப்பு தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. விசாரணை முழுமையாக முடியும் வரை படப்பிடிப்பை தொடங்கி நடத்துவதும் சிரமம்.

திடீர் என்று படக்குழுவினர் விசாரணைக்கு அழைக்கப்படலாம். இதனால் இந்தியன் 2 திட்டமிட்ட காலத்தில் வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. திடீரென்று சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டால் கமல் அரசியல் பணிகளை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் அப்போது இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குவதற்கான சூழல் மேலும் மோசமடையும் என்று தமிழ் சினிமாவில் பேசப்படுகிறது.