நடிகர் சூர்யாவின் 46-வது படமாக உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய 45-வது படமான ‘கருப்பு’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள தனது 46-வது படத்தில் சூர்யா நடித்துள்ளார். இப்படத்திற்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இதில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்க, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
சூர்யாவின் பிறந்தநாளையொட்டி வெளியான படத்தின் இரண்டாவது பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் பாடலை நடிகர் சூர்யா தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார். கென் கருணாஸ் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடல், குடும்பத் திருமண விழாவின் கொண்டாட்டத்தை மையமாகக் கொண்டு துள்ளலான இசையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

