Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி!

Veteran Actress Sowcar Janaki Hospitalised Due to Ill Health

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1931-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி பிறந்த சௌகார் ஜானகி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், 300-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

தெலுங்கில் வெளியான ‘ஷவுகாரு’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவருக்கு, அந்தப் படத்தின் பெயரே பின்னர் ‘சௌகார்’ என்ற அடைமொழியாக மாறியது. 1952-ஆம் ஆண்டு வெளியான ‘வளையாபதி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கன்னடத்தில் 1959-ஆம் ஆண்டு வெளியான ‘மகிஷாசுர மர்தினி’ திரைப்படத்தில் டாக்டர் ராஜ்குமாருடன் நடித்த சௌகார் ஜானகி, தென்னிந்திய திரையுலகின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.

கலைத்துறையில் இவரது நீண்டகாலப் பங்களிப்பைப் பாராட்டி நந்தி விருதுகள், கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதையும் சௌகார் ஜானகி பெற்றுள்ளார்.