கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், கியாரா அத்வானி, நயன்தாரா, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கேங்ஸ்டர் ஆக்ஷன் திரைப்படம் ‘டாக்சிக்’. சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு யஷ் திரையில் தோன்றியுள்ளதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
படம் வெளியான பின்னர், திரைக்கதையில் தெளிவின்மை மற்றும் இரண்டாம் பாதியில் இடம்பெற்றுள்ள அதிகப்படியான வன்முறைக் காட்சிகள் குறித்து சமூக வலைதளங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. அதேநேரம், யஷின் கம்பீரமான நடிப்பு மற்றும் மாஸ் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
இதன் விளைவாக, எதிர்மறை விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்புடன் படம் வசூல் வேட்டையைத் தொடங்கியுள்ளது. முதல் நாளில் இந்திய அளவில் ரூ.60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஷாருக்கானின் ‘பதான்’ படத்தின் ஆரம்ப நாள் வசூல் வேகத்தையும் ‘டாக்சிக்’ முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கன்னடம் மற்றும் இந்தி பதிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதுடன், கர்நாடகம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை காட்சிகளிலேயே 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட இருக்கைகள் நிரம்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை வெளியான இப்படத்திற்கு தொடர்ந்து வரும் விடுமுறை நாட்கள் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முதல் நாளின் முடிவில் உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

