‘ஹீரோஸ்’, ‘நாஷ்வில்லி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘ஸ்க்ரீம் 4’, ‘ஸ்க்ரீம் 6’, ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்த ஹாலிவுட் நடிகை ஹெய்டன் பனெட்டியர் 36 வயதில் திடீரென உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கிரீன்வில்லில் அவர் ஆகஸ்ட் 16ஆம் தேதி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் உயிரிழந்ததற்கான சரியான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. போலீஸ் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சந்தேகத்திற்கிடமான சூழல் அல்லது வெளிப்புற தாக்குதலுக்கான அறிகுறிகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய ஹெய்டன், ‘ஹீரோஸ்’ தொடரில் கிளேர் பென்னட் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானார். தொடர்ந்து ‘நாஷ்வில்லி’ தொடரில் ஜூலியட் பார்னஸ் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இரண்டு முறை கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
2014ஆம் ஆண்டு மகள் கயா பிறந்த பிறகு பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தத்தை எதிர்கொண்டதாக ஹெய்டன் வெளிப்படையாகப் பேசியிருந்தார். பின்னர் மதுப் பழக்கத்துடனும் போராடிய அவர், தனது வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் அதிலிருந்து மீண்டு வந்த அனுபவங்களை ‘This Is Me: A Reckoning’ என்ற சுயசரிதை நூலில் பதிவு செய்திருந்தார்.
36 வயதிலேயே ஹெய்டன் பனெட்டியரின் திடீர் மறைவு ஹாலிவுட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

