சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “இந்தப் பிரச்சினையை நடிகர்களாலும், தயாரிப்பாளர்களாலும் மட்டுமே தீர்க்க முடியாது. சமூக வலைதளங்களில் பெண்களின் புகைப்படங்கள் தவறான முறையில் பரப்பப்படுவதை எதிர்த்து மக்கள் குரல் எழுப்பினாலும், சிலர் அதே புகைப்படங்களை எடுத்து பெரிதாக்கி, விசித்திரமான கோணங்களில் பயன்படுத்தி வைரலாக்குகின்றனர்.
இதற்கென ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்கள் கூட்டமும் உள்ளது. எனவே, இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதில் பார்வையாளர்களும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். பெண்களைப் பார்க்கும் இந்த அணுகுமுறைக்கு எதிராக பார்வையாளர்கள் குரல் கொடுப்பது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.

