தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என பல்வேறு பரிமாணங்களில் ரசிகர்களை கவர்ந்து வரும் அவர், திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அவரது நடிப்பில் ‘டாக்ஸிக்’ திரைப்படம் ஆகஸ்ட் 26-ஆம் தேதியும், ‘ஹாய்’ திரைப்படம் ஆகஸ்ட் 28-ஆம் தேதியும் வெளியாக உள்ள நிலையில், நயன்தாராவின் ஆரம்ப கால திரைப்பயணம் குறித்த தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது முதல் சம்பளம் குறித்து பேசிய நயன்தாரா, “சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஒரு அட்டைப்பட படப்பிடிப்பில் பங்கேற்றேன். அதற்காக எனக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை சம்பளம் வழங்கப்பட்டது. அதற்கு முன்பு நான் பெற்ற சம்பளம் என்றால், சிறு வயதில் என் தந்தையின் நகத்தை வெட்டியதற்காக ரூ.500 கிடைத்தது” என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எந்த திட்டமும் தன்னிடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மாடலிங் செய்து கொண்டிருந்தபோது, ஒரு பத்திரிகையின் அட்டைப்படத்தில் தனது புகைப்படத்தை பார்த்த இயக்குநர் சத்யன் அந்திக்காடு, 2003-ஆம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ திரைப்படத்தில் நடிக்க தன்னை அணுகியதாக நயன்தாரா தெரிவித்துள்ளார்.
அந்த வாய்ப்புதான் தனது முதல் திரையுலக அனுபவம் என்றும், அதன்பிறகு தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக தான் உயர்ந்ததாகவும் நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.

