72-வது தேசிய திரைப்பட விருதுகளில் நடிகர், இயக்குநர் தனுஷ் இரட்டை அங்கீகாரத்தை பெற்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் சிறந்த தமிழ் (பிராந்திய) திரைப்படத்திற்கான தேசிய விருதையும், ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் வெளிப்படுத்திய நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான Special Mention விருதையும் பெற்றுள்ளது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தைத் தொடர்ந்து, தேசிய விருது நடுவர் குழு, ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் தனது திரைப்பயணத்தில் துணைநின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனுஷ் உணர்வுபூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஓம் நமசிவாய! ‘ராயன்’ படத்திற்காக சிறந்த பிராந்திய திரைப்படத்திற்கான தேசிய விருதையும், ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான Special Mention விருதையும் பெற்றிருப்பது எனக்கு மிகுந்த பணிவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. தேசிய திரைப்பட விருதுகள் நடுவர் குழுவிற்கும், தேர்வுக் குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “எனது திரைப்பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் துணைநின்ற பத்திரிகைகள், ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரு நடிகராக இது எனது மூன்றாவது தேசிய விருது. ஒரு இயக்குநராக இது எனது முதல் தேசிய விருது. என் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது” என குறிப்பிட்டுள்ளார்.
‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்தது தனது சிறந்த நடிப்புகளில் ஒன்று என்றும், அந்தக் கதாபாத்திரத்திற்காக தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது மிகவும் அர்த்தமுள்ளதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், ‘ராயன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தனது முதல் தேசிய விருதை வென்றது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத சாதனையாக இருக்கும் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
அறிக்கையின் இறுதியில், “எண்ணம் போல் வாழ்க்கை”, “ஹர ஹர மகாதேவ்” என்ற தனது வழக்கமான வார்த்தைகளுடன், “அன்புடன் D” என பதிவை நிறைவு செய்துள்ளார்.
OM NAMASHIVAAYA 🙏😇❤️ pic.twitter.com/3wkQYHER25
— Dhanush (@dhanushkraja) July 18, 2026

