இந்திய இலக்கிய உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான ஞானபீட விருதை வென்றுள்ள பிரபல தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் இலக்கியத்துக்கான 60-வது ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அகிலன் (1975), ஜெயகாந்தன் (2002) ஆகியோருக்குப் பிறகு ஞானபீட விருது பெறும் 3-வது தமிழ் எழுத்தாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதுவரை ஞானபீட விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் வசன நடை மற்றும் நாவல் படைப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், தமிழ் கவிதைக்காக இந்த விருதைப் பெறும் முதல் கவிஞர் என்ற வரலாற்றுச் சிறப்பையும் வைரமுத்து பெற்றுள்ளார்.
இந்நிலையில், வைரமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அமித் ஷா, அவரது பல ஆண்டுகால இலக்கியப் பயணம், ஆழமான அறிவாற்றல் மற்றும் சிறந்த படைப்பாற்றலுக்குக் கிடைத்த அங்கீகாரமே இந்த விருது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்காலத்திலும் அவரது படைப்புகள் சமூகத்திற்கு புதிய பார்வையையும் விழிப்புணர்வையும் வழங்கும் என்றும், வருங்கால தலைமுறைகள் தங்களது தாய்மொழி மற்றும் இலக்கியத்துடன் தொடர்ந்து இணைந்திருக்க இந்த வரலாற்றுச் சாதனை ஊக்கமளிக்கும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கு வைரமுத்து ஆற்றியுள்ள பங்களிப்பை பாராட்டி, அவருக்கு தேசிய அளவில் பல்வேறு தலைவர்களும் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

