கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டாக்ஸிக்’. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
படத்தில் இடம்பெற்ற அதிகப்படியான வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகள் காரணமாக எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றும், இதன் தாக்கம் வசூலிலும் எதிரொலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே திரையரங்க வசூல் எதிர்பார்த்தபடி அமையாத நிலையில், தற்போது படக்குழுவுக்கு மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘டாக்ஸிக்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பு, அதன் ஓடிடி உரிமையை வாங்குவதற்கு சில முன்னணி நிறுவனங்கள் சுமார் ரூ.150 கோடி வரை வழங்க பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், தயாரிப்பாளர் தரப்பில் ரூ.200 கோடி வரை எதிர்பார்க்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், படம் வெளியான பிறகு கிடைத்த விமர்சனங்கள் மற்றும் திரையரங்க வசூல் காரணமாக, தற்போது ஓடிடி உரிமைக்காக ரூ.30 முதல் ரூ.35 கோடி வரை மட்டுமே நிறுவனங்கள் முன்வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே திரையரங்க வசூலில் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், ஓடிடி உரிமையின் மதிப்பும் கணிசமாகக் குறைந்துள்ளதாக வெளியாகியுள்ள இந்தத் தகவல் ‘டாக்ஸிக்’ படக்குழுவுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

