‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும் இப்படத்தை ‘சக்ரா’ படத்தை இயக்கிய எம்.எஸ். ஆனந்தன் இயக்குகிறார்.
இப்படத்தில் ஜெய், பிரியங்கா மோகன் மற்றும் யோகி பாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ராஜீவ் மேனன், நாசர், ஜி.எம். சுந்தர், ரமேஷ் திலக், அருள் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர்.
அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன், நகைச்சுவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் இணைத்து விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லராக இப்படம் உருவாகவுள்ளது.
படம் குறித்து இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் கூறுகையில், “ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இப்படத்தை இயக்குவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையை விட்டு நகர விடாமல் வைத்திருக்கும் ஆக்ஷன் திரைப்படமாக இது இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
‘ஏஜிஎஸ் 29’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஊட்டி உள்ளிட்ட முக்கிய இடங்களில் நடைபெறவுள்ளது. இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக அர்ச்சனா கல்பாத்தியும், அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியூசராக ஐஸ்வர்யா கல்பாத்தியும், நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கமும் பணியாற்றுகின்றனர்.
‘கேஜிஎஃப்’ மற்றும் ‘பிளாஸ்ட்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார்.

