மும்பை: மூத்த நடிகர் பிரதீப் ராவத் (74), ரத்தப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று மாலை மும்பையில் காலமானார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயிலிருந்து மீண்டிருந்த அவர், கடந்த ஒன்றரை மாதங்களாக நோய் மீண்டும் தீவிரமடைந்ததால் மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
பிரதீப் ராவத்துக்கு மனைவி கல்யாணி மற்றும் மகன் விக்ரமாதித்யா உள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை மும்பையில் நடைபெறுகின்றன.
பி.ஆர். சோப்ராவின் புகழ்பெற்ற ‘மகாபாரதம்’ தொலைக்காட்சி தொடரில் அஸ்வத்தாமன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனது கலைப் பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் இந்தியில் ‘லகான்’ திரைப்படம் மூலம் கவனம் பெற்றார்.
தமிழ் ரசிகர்களிடையே, சூர்யா நடித்த ‘கஜினி’ திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய நடிப்பின் மூலம் தனி இடத்தைப் பிடித்தார். அந்தப் படத்தின் இந்தி ரீமேக்கிலும் அதே வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், ‘தொட்டி ஜெயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
இந்தி, தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், போஜ்புரி மற்றும் நேபாளி மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ள பிரதீப் ராவத்தின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நாடு முழுவதும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

