கன்னட திரையுலகில் தனது பயணத்தை தொடங்கிய நடிகர் யாஷ், ‘கே.ஜி.எஃப்.’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமா முழுவதும் கவனம் ஈர்த்த நட்சத்திரமாக உயர்ந்தார். தற்போது இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் நடித்துள்ள அவர், அடுத்ததாக ‘ராமாயணா’ படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இதற்கிடையில், பாலிவுட்டில் தனது தடத்தை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் இருக்கும் யாஷ், மும்பை அருகே உள்ள அலிபாக் கடலோரப் பகுதியில் ரூ.30 கோடி மதிப்பிலான நிலத்தை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சொத்தில் பிரம்மாண்டமான சொகுசு வீடும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த சொத்து நடிகர் யாஷ் மற்றும் அவரது மனைவி ராதிகா பண்டிட் ஆகியோரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ச்சியாக இந்தி திரைப்பட வாய்ப்புகளை ஆராய்ந்து வரும் நிலையில், மும்பையில் யாஷ் மேற்கொண்டுள்ள இந்த மிகப்பெரிய முதலீடு தற்போது திரையுலகில் பரபரப்பான பேசுபொருளாக மாறியுள்ளது.

