நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கும் விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது. இந்த மனு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
இதனிடையே, ரவி மோகனின் தோழி கெனிஷாவே இந்த பிரிவுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. பல மாதங்களாக தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்தும், அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் இருந்து வந்த கெனிஷா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டு மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த வீடியோவில், “என்னை பற்றி முழுமையாக அறியாமல் விமர்சிக்க வேண்டாம். ரவி மோகனின் குடும்பத்தை நான் கெடுத்தேனா? உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா?” என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
மேலும், தனது சிறுவயது வாழ்க்கை குறித்து உருக்கமாக பகிர்ந்த அவர், “நான்கு வயதிலிருந்தே குடும்பத்தினரால் துன்புறுத்தப்பட்டேன். என் பெற்றோர் இருவரையும் இழந்தேன். இளம் வயதில் நடந்த திருமண வாழ்க்கையும் கொடுமைகளால் நிரம்பியதாக இருந்தது. குடும்ப வன்முறையால் கருச்சிதைவும் ஏற்பட்டது,” என்று கூறியுள்ளார்.
“இந்த எல்லா துயரங்களிலிருந்தும் மீண்டு வரவே நான் பல போராட்டங்களை சந்தித்தேன். அம்மா, அப்பா, குழந்தை என அனைத்தையும் இழந்த நான், மற்றொருவரின் குடும்பத்தை கெடுக்க நினைப்பேனா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ரவி மோகனைச் சுற்றியுள்ள சர்ச்சை குறித்து நேரடியாக பதிலளித்த கெனிஷா, “அவர் தனது வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தபோது சிகிச்சைக்காக என்னை அணுகினார். அதன்பிறகுதான் எங்கள் நட்பு தொடங்கியது. ரவி மோகன் குழந்தை இல்லை. தனது வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கத் தெரிந்தவர். அப்படி இருக்கும்போது ஏன் என்னை மட்டும் குற்றம்சாட்டுகிறீர்கள்?” என்று தெரிவித்துள்ளார்.
இறுதியாக, “சமூகத்தில் பேச வேண்டிய உண்மையான பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன. அவற்றைப் பற்றி பேசுங்கள்,” என்றும் கெனிஷா தனது வீடியோவில் கூறியுள்ளார்.
View this post on Instagram
View this post on Instagram

