இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத்!
புதிய இசை நிறுவனம் தொடங்கியுள்ளார் அனிருத். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவல்கள் பார்ப்போம்..
இசையமைப்பாளர் அனிருத், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். தமிழில் தற்போது `ஜெயிலர் 2′ உள்பட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், ‘அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்’ என்ற இசை நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதுபற்றி அனிருத் கூறும்போது,
‘படைப்பாற்றல், உரிமை, கலாச்சார தாக்கத்தை மையமாகக் கொண்டு இசை வணிகத்தை உருவாக்கும் எனது பயணத்தின் தொடக்கமாக இந்த ‘அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்’ அமைந்துள்ளது. எனது திரைப்பட மற்றும் திரைப்படம் அல்லாத படைப்புகளுக்கான தளமாக இந்நிறுவனம் செயல்படும். அதோடு வெளிச்சத்துக்கு வர தகுதியான புதிய மற்றும் திறமையான கலைஞர்களையும் இந்நிறுவனம் ஆதரிக்கும்.
வலுவான இசைத் தொகுப்பை உருவாக்கி, தனித்துவமான குரல்களை அறிமுகப்படுத்தி, பிராந்திய பாப் கலாச்சாரத்தை முன்னோக்கி நகர்த்தும் வலுவான பிராண்டை உருவாக்குவதே எங்கள் நோக்கம். தொடக்கக் கட்டமாக, எனது தேர்ந்தெடுக்கப்பட்ட அசல் சவுண்ட் டிராக்குகளும், எனது அனைத்து பாப் இசை வெளியீடுகளும் இதன் கீழ் வெளியாகும்’ என தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனத்தின் வணிக மற்றும் செயல்பாட்டு பொறுப்புகளை, தலைமை இயக்க அதிகாரி பி.கவுஷிக் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


