‘திரவுபதி 2’-வில் சின்மயி பாடிய பாடல் நீக்கம்: இயக்குநர் தகவல்
தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி பாடல் பாட முடியாமல்போன விவகாரம் அனைவரும் அறிந்ததே. இச்சூழலில் மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் பட இசை வெளியீட்டு விழாவில் ‘காலையில் கனவினில் கண் விழித்தேன்’ என்ற பாடலை பாடி இசை ஆர்வலர்களை மீண்டும் ஈர்த்தார். இந்நிலையில், இவர் தொடர்ந்து பாடிட சிலர் முன்வந்தனர்.
இத்தகைய நிலையில், ரிச்சர்ட் ரிஷி, ரக் ஷனா இந்து சுதன் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘திரவுபதி 2’. மோகன்.ஜி இயக்கியுள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசை. நேதாஜி புரொடக்சன்ஸ், சோழ சக்ரவர்த்தி மற்றும் ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் இணைந்து தயாரிக்கப்பட்டு உள்ளது.
இப்படத்தில், சின்மயி ‘எம்கோனே’ என்ற பாடலை பாடியிருந்தார். இந்தப் பாடலை பாடியதற்காக சின்மயிக்கு எதிராக சிலர் வலைத் தளங்களில் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, மோகன்.ஜி படத்தில் பாடியதற்காக சின்மயி மன்னிப்பு கேட்டிருந்தார். என்னுடைய கொள்கைக்கும் இப்படத்தின் கருத்துக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது என்றும் என் சித்தாந்தத்துக்குப் பொருந்தாததால் வருந்துகிறேன் என்றும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் ‘திரவுபதி 2’ படத்தில் சின்மயி பாடிய எம்கோனே பாடல் இடம்பெறாது என இயக்குநர் மோகன்ஜி தெரிவித்துள்ளார். இது பற்றி தெரிவிக்கையில்,
‘எம்கோனே பாடல் கண்டிப்பாகப் படத்தில் இருக்கும். ஆனால், சின்மயி குரலில் இருக்காது. அவருக்குப் பதில் வேறொரு பாடகி குரலில் வருகிறது. போன வாரம்வரை சின்மயியின் பதிலுக்காக நேரம் கொடுத்திருந்தேன். இயக்குநர் சங்கத்திலும் புகார் கொடுத்திருக்கிறேன்.
அதேபோல் தயாரிப்பாளரும் அவரது சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். எங்கள் படத்தைப் பொதுவெளியில் களங்கம் ஏற்படுத்தியதற்காக நடவடிக்கை எடுக்கக் கேட்டுள்ளோம். இரண்டு புகாருமே பெப்சிக்கு சென்றிருக்கிறது. இது தொடர்பாக சின்மயிடம் ஃபெப்சி கேள்வி கேட்டுள்ளது’ என கூறியுள்ளார்.


