எதற்கும் துணிந்தவன் படத்தின் வெற்றிக்கு பிறகு பாலா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதற்குமுன் இந்த கூட்டணியில் பிதாமகன், நந்தா படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தற்போது இவர்கள் மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 41’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை ‘2டி என்டர்டைன்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது.
சமீபத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இதனிடையே சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே மோதல், இதனால் படப்பிடிப்பு தளத்திலிருந்து சூர்யா விலகியதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது போன்ற தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.
இந்நிலையில் நடிகர் சூர்யா இப்படம் குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், மீண்டும் சூர்யா 41 படப்பிடிப்புக்கு வர காத்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டு, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். தொடர் வதந்திகளுக்கு மத்தியில் ஒரு பதிவின் மூலம் சூர்யா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவரின் இந்த பதிவு சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
Waiting to be back on sets…!! #Suriya41 pic.twitter.com/enuJ5MNbZJ
— Suriya Sivakumar (@Suriya_offl) May 26, 2022

