திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் மாநில துணைத் தலைவர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆலப்புழாவில் உள்ள கணச்சுகுளங்கரை தேவி கோவில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவன் கலந்து கொண்டார். இதில் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகத்தின் பொதுச்செயலாளர் வெள்ளாப்பள்ளி நடேசன் மற்றும் பாஜக தலைவர் பி. ராதாகிருஷ்ணன் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய தேவன், தனது அரசியல் விலகல் முடிவை பகிரங்கமாக அறிவித்தார்.
சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவின் கொள்கைகள், தத்துவங்கள் மற்றும் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியலையே தான் விரும்புவதாக தேவன் கூறினார். கடந்த 5 ஆண்டுகளாக கேரள பாஜகவில் பணியாற்றிய போதிலும், தனது அரசியல் இலக்குகளை அடைய முடியவில்லை என்றும், தனது பாதை வேறானது என்பதை உணர்ந்ததால் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக ‘கேரளா பீப்பிள்ஸ் பார்ட்டி’ என்ற கட்சியை தொடங்கி நடத்தி வந்த தேவன், 2020ஆம் ஆண்டு அதனை ‘நவ கேரளா பீப்பிள்ஸ் பார்ட்டி’ என பெயர் மாற்றினார். 2021ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின்னர் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார். இதையடுத்து அவருக்கு கேரள பாஜக மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
2024 மக்களவைத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகருக்கு கிடைத்த கணிசமான வாக்குகளிலும் அவரது தேர்தல் வெற்றியிலும் தனது உழைப்பு முக்கிய பங்கு வகித்ததாக தேவன் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, கோவில் நிகழ்ச்சி மேடையில் தேவன் தனது ராஜினாமாவை அறிவித்ததற்கு பாஜக தலைவர் பி. ராதாகிருஷ்ணன் மேனன் அதிருப்தி தெரிவித்துள்ளார். 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் முன்னணி நாடாக மாற்ற பாஜக மேற்கொண்டு வரும் முயற்சிகளில் இருந்து விலக தேவன் எடுத்த முடிவுக்கான காரணம் தெரியவில்லை என்றும், ஆனால் தனது விலகலை அறிவிக்க இந்த மேடை பொருத்தமான இடம் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

