தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஜோதிகா, தனது 47 வயதில் முதல்முறையாக ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்தியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் தீவிர உடல் வலிமைப் பயிற்சியின் மூலம் இந்த புதிய பிட்னஸ் மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.
தனது பிட்னஸ் பயணம் குறித்து பேசிய ஜோதிகா, “எனது பயிற்சியாளர் மகேஷ் கனேகர் வழங்கிய மிகச்சிறந்த அறிவுரை, உடற்பயிற்சி என்பது வெளிப்புற தோற்றத்திற்காக மட்டுமல்ல; உடலின் உள் வலிமைக்காகவும் என்பதை உணர்த்தியது. வலிமை அதிகரிக்கும்போது உடல் எடை தானாகவே குறையும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், “44 வயதில் அவருடன் எனது உடற்பயிற்சி பயணத்தைத் தொடங்கினேன். இன்று 47 வயதில் முதல்முறையாக இரண்டு புல்-அப்ஸ் செய்துள்ளேன். வயது என்பது வெறும் எண் மட்டுமே. நம்மால் முடியாதது எதுவுமில்லை என்பதை அவர் எனக்கு நிரூபித்துள்ளார். இது எனக்கு அற்புதமான உணர்வைத் தருகிறது” என ஜோதிகா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
தற்போது ‘சிஸ்டம்’ வெப் சீரிஸ் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ள ஜோதிகா, தனது தினசரி உடற்பயிற்சி முறையையும் பகிர்ந்துள்ளார். தான் அதிகாலையில் எழும் பழக்கம் கொண்டவர் என்றும், வாரத்திற்கு 4 முதல் 5 நாட்கள் உடற்பயிற்சி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
காலையில் எழுந்ததும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டுவிட்டு ஜிம்மிற்குச் சென்று பளுதூக்கும் பயிற்சி உள்ளிட்ட உடல் வலிமைப் பயிற்சிகளை மேற்கொள்வதாகவும், இரண்டு நாட்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்துவிட்டு ஒரு நாள் ஓய்வெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
40 வயதைக் கடந்த பெண்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் வயது ஒரு தடையல்ல என்பதை தனது விடாமுயற்சியின் மூலம் ஜோதிகா மீண்டும் நிரூபித்துள்ளார்.
View this post on Instagram

