நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கிறார்.
தற்போது கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வரும் அஜித்குமார், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, இப்படத்தில் ஷாலினியை சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைக்க இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஷாலினி நடிக்க விருப்பம் இல்லை எனக் கூறி அந்த வாய்ப்பை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஜித்தை திருமணம் செய்துகொண்ட பிறகு திரையுலகில் இருந்து விலகிய ஷாலினி, கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான ‘பிரியாத வரம் வேண்டும்’ திரைப்படத்திற்குப் பிறகு படங்களில் நடிக்கவில்லை. இப்படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.
இதனால், ‘டேர் டெவில்’ படத்தில் ஷாலினி சிறப்புத் தோற்றத்தில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில், அவர் நடிக்க மறுத்துவிட்டதாக வெளியாகியுள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.

