சினிமா வாழ்க்கை நிரந்தரமில்லை – மனம் திறந்த ராஷி கன்னா
தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, திருச்சிற்றம்பலம், அரண்மனை 4, சர்தார், உள்பட சில படங்களில் நடித்துள்ள இந்தி நடிகையான ராஷி கன்னா, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது:
மொழிகளைப் படிப்பது எனக்குப் பிடிக்கும். அதை ஒரு வேலையாகச் செய்து வருகிறேன். இந்தி, ஆங்கிலத்தை அடுத்து தெலுங்கு, தமிழ் மொழிகளை நன்றாகப் பேசுவேன். இப்போது பஞ்சாபியும் பேசக் கற்றுள்ளேன்.
கொஞ்சம் பெங்காலியும் தெரியும். ஒவ்வொரு மொழியிலும் சிறந்த கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது விருப்பம். அதனால் கதாபாத்திரங்கள்தான் முக்கியம். அங்கு மொழி இரண்டாம் பட்சம்தான் என்றாலும் பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ள அம்மொழியைக் கற்றுக்கொள்வது அவசியம் என நினைக்கிறேன். அதனாலேயே எந்த மொழியில் நடித்தாலும் அதைக் கற்றுக்கொள்கிறேன்.
பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது, கதை கேட்காமல் ஒப்புக்கொண்டேன். பவன் கல்யாணுக்காக ஏற்றுக்கொண்டேன். அதன் படப்பிடிப்பில் ஏராளமான ரசிகர்கள் ‘பவனிஷம்’ என்று எழுதியிருந்த டிஷர்ட் அணிந்துகொண்டு வந்தனர். அவருடைய தீவிரமான ரசிகர் பட்டாளத்தைக் கண்டு வியந்தேன்.
ஒவ்வொருவரும் சிறந்த படத்தைக் கொடுக்க வேண்டும் என்றுதான் சினிமாவில் உழைக்கிறார்கள். அனைவரும் இந்திய சினிமாவுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். அதனால், பல்வேறு மொழிகளில் பணியாற்றினாலும் எந்த வித்தியாசத்தையும் நான் பார்க்கவில்லை. யாருடன் நடிக்க விரும்புகிறீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள்.
ரன்பீர் கபூர், விக்கி கவுஷல் ஆகியோர் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறார்கள். அவர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
இயக்குநரைப் பொறுத்தவரை சஞ்சய் லீலா பன்சாலி தனது படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அவர் இயக்கத்தில், குறிப்பாக ஒரு பாடலிலாவது நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த லிஸ்ட்டில் ரிஷப் ஷெட்டி, ராஜமவுலி ஆகியோரும் இருக்கிறார்கள்’ என ராஷி கூறியுள்ளார்.


