பெண்களின் ஆடை குறித்து பேசிய தெலுங்கு நடிகருக்கு கண்டனம் தெரிவித்த சின்மயி
தெலுங்கு நடிகர் சிவாஜி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ‘தண்டோரா’ படம் வருகிற 25-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பெண்களின் ஆடை பற்றி சிவாஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.அவர் பேசுகையில்,
‘பெண்கள் கண்டபடி உடைகள் அணிந்தால், நீங்கள்தான் பிரச்சினையை சந்திக்க வேண்டி இருக்கும்.என்னைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், நீங்கள் எடுத்துக்கொண்டாலும் எனக்குப் பிரச்சினை இல்லை. எப்படி சமாளிப்பது என எனக்குத் தெரியும்.
உங்கள் அழகு, முழுதாக மூடும் சேலையில்தான் உள்ளதே தவிர, அங்கங்கள் தெரியும்படி அணியும் உடைகளில் இல்லை’ என்றார். இந்த பேச்சுக்கு இப்போது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக பாடகி சின்மயி, தெலுங்கு நடிகர் சிவாஜி இப்படி பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ‘பெண்கள் குறித்து இப்படி ஒரு நடிகர் பேசுவது ரொம்ப துரதிர்ஷ்டவசமானது. இப்படி பேசும் அவரே ஜீன்ஸ் மற்றும் ஹுட்டிதான் அணிந்துள்ளார். அவர், இந்திய கலாச்சாரத்தை பின்பற்றி வேட்டி மட்டும் அணிய வேண்டும். பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
திருமணம் ஆகாதவராக இருந்தால், மெட்டி போட்டுக்கொள்ள வேண்டும்’ என காட்டமாக தெரிவித்துள்ளார். தெலுங்கு நடிகர் சிவாஜியின் இந்த பேச்சுக்கு சின்மயி மட்டுமல்லாது பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


