Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இயக்குநரிலிருந்து கதாநாயகனாக ஜேசன் சஞ்சய்? – சந்தீப் கிஷன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

Jason Sanjay to Make His Acting Debut Sundeep Kishan Reveals an Interesting Detail!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்புதாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தின் ஒரு சிறப்பு பாடலில் ஜேசன் சஞ்சய் நடனமாடியுள்ளார்.

கனடாவில் உள்ள டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ படித்துள்ள ஜேசன் சஞ்சய், பின்னர் லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படிப்பையும் முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், ஜேசன் சஞ்சய் விரைவில் கதாநாயகனாகவும் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.எம். தமிழ்குமரன் தயாரிப்பில் அவர் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ‘சிக்மா’ படத்தையும் தயாரித்துள்ள லைகா நிறுவனத்தின் தலைவராக ஜி.கே.எம். தமிழ்குமரன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ‘சிக்மா’ படத்தின் கதாநாயகன் சந்தீப் கிஷன், ஜேசன் சஞ்சய் குறித்து பேசியுள்ள தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாவதற்குப் பதிலாக நடிப்பைத் தேர்வு செய்திருந்தால், தனது முதல் படத்திலேயே இந்திய அளவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் நட்சத்திரமாக உயர்ந்திருப்பார். ஆனால், நடிப்புக்கு முன்பாக இயக்குநராக தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். அவரது முதல் படமான ‘சிக்மா’ வெற்றி பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.