தமிழக முதலமைச்சராக விஜய் சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலகம் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதை முன்னிட்டு, நடிகர் பார்த்திபன் தனது தனித்துவமான வார்த்தை ஜாலத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “‘வெற்றிக்கொடி கட்டு’ படத்தில் நடித்த நான், அரசியலில் வெற்றிக்கொடி கட்டிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மாநில முதலமைச்சராக சுதந்திர தினத்தன்று மூவர்ணக் கொடியை ஏற்றுவது குறித்து கவிதை எழுதுவதா? உரைநடையாவது எழுதலாம் என யோசித்தபடி, தமிழ் அகராதியில் வார்த்தைகளைத் தேடினேன்.
கொடி காத்த குமரன் உள்ளிட்ட எண்ணற்ற தியாகிகள் பெற்றுத் தந்த சுதந்திரத்தை மதிப்புடன் காத்த சுதந்திரக் கொடியை ஆகஸ்ட் 15-ல் பட்டொளி வீசிப் பறக்கவிடும் பெருமையை நமது முதலமைச்சர் முதன்முறையாகப் பெறுகிறார்.
தமிழ்த்தாய் வாழ்த்து விழாக்களின் தொடக்கத்தில் பாடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவர். அரசியல் அனுபவம் இல்லாவிட்டாலும், மக்களுக்காக செயல்பட அரசியலுக்கு வந்து வெற்றிக்கொடி நாட்ட முடியும் என்ற நம்பிக்கையை இளைஞர்களின் மனதில் விதைத்தவர்.
ஆட்சியைப் பெற பணம் தேவையில்லை; மக்களின் நன்மதிப்பை நம் பக்கம் திருப்பினாலே வெற்றி பெறலாம் என்ற சூத்திரத்தை அரசியல்வாதிகளுக்கு உணர்த்தியவர். அரசு ஊழியர்கள் நேரத்திற்கு பணிக்கு வந்து நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்பதற்கு தானே முன்மாதிரியாக இருந்தவர்.
விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியவர். லஞ்சம் வாங்குவதற்கே இதயத்தில் பயத்தை ஏற்படுத்தியவர். இவ்வாறு இன்னும் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியவர் என்ற தகுதியுடன் ஆகஸ்ட் 15-ல் சுதந்திரக் கொடியை நமது முதலமைச்சர் பெருமையுடன் ஏற்றுகிறார்” என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

