இயக்குநர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு புதிய சிறப்பு டீசரும் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.
‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’, ‘பறந்து போ’ உள்ளிட்ட விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்களை இயக்கிய ராம், தனித்துவமான கதையம்சங்களுக்காக அறியப்பட்டவர். மனித உணர்வுகளையும், சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையையும் மையமாகக் கொண்டு படங்களை உருவாக்கும் அவர், தற்போது ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
திரையரங்க வெளியீட்டிற்கு முன்பே, இந்தப் படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. 46-வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழா, ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா, டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட பல முக்கிய விழாக்களில் தேர்வாகி, உலகத் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
ஏற்கனவே வெளியாகியிருந்த டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள சிறப்பு டீசர் மூலம் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் அக்டோபர் 1 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ராம் இயக்கம், யுவன் சங்கர் ராஜாவின் இசை, நிவின் பாலி – அஞ்சலி – சூரி கூட்டணி மற்றும் சர்வதேச அளவில் கிடைத்த பாராட்டுகள் ஆகியவற்றால் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

