நடிகை தமன்னா சந்தோஷ் பாட்டியா தாக்கல் செய்திருந்த ரூ.1 கோடி இழப்பீடு கோரும் மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) தள்ளுபடி செய்தது.
புதுச்சேரியைச் சேர்ந்த பவர் சோப்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருந்த தமன்னா, தனது ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் அந்த நிறுவனம் தனது புகைப்படங்களை சோப்பு உறைகள் மற்றும் விளம்பரப் பொருட்களில் பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து, ரூ.1 கோடி நஷ்டஈடு கோரி 2011ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை முன்பு விசாரித்த உயர்நீதிமன்ற தனிநீதிபதி, தமன்னா தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் நம்பகத்தன்மையற்றவை எனக் கூறி, 2017ஆம் ஆண்டு மனுவை தள்ளுபடி செய்திருந்தார்.
இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் கே. கோவிந்தராஜன் திலகவதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் முடிவில், தனிநீதிபதி வழங்கிய உத்தரவில் தலையிட தேவையில்லை என நீதிமன்றம் தெரிவித்ததுடன், தமன்னா தரப்பின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

