Tamilstar
Movie Reviews

நீளிரா திரை விமர்சனம்

Neelira Movie Review

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத விதமாக பெரும் நெருக்கடியாக மாறுகிறது. அனுமதி பெற்று நடைபெறவிருந்த அந்த திருமண வீடு, திடீரென இந்திய ராணுவத்தால் சுற்றிவளைக்கப்படுகிறது. அதே நேரத்தில் போராளிகளும் அந்த இடத்தை குறிவைப்பதால், அந்த வீட்டுக்குள் பயமும் பதற்றமும் நிறைந்த சூழ்நிலை உருவாகிறது.

இறுதியில், அந்த வீட்டில் திருமணம் நடந்ததா? ராணுவத்திற்கும் போராளிகளுக்கும் இடையே மோதல் வெடித்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நவீன் சந்திரா நேர்மையான ராணுவ வீரராக, கடமைக்கும் மனிதநேயத்திற்கும் இடையே சிக்கிக் கொண்ட மனநிலையை நுணுக்கமாக வெளிப்படுத்துகிறார். ரூபா கொடுவாயூர் பாதிக்கப்பட்ட பெண்ணாக மிக இயல்பான மற்றும் உணர்ச்சி மிகுந்த நடிப்பை வழங்குகிறார். சித்து குமரேசன், கயல் வின்சென்ட், சுவாதி கிருஷ்ணா, நவயுகா நமச்சிவாயம், தம்பி பிள்ளை, ரோகித் கராத்தே உள்ளிட்டோர் அனைவரும் போரின் பயத்தையும் பதற்றத்தையும் கண்களில் காட்டி கதையின் வலிமையை உயர்த்துகின்றனர்.

போரின் நடுவில் சிக்கிக் கொள்ளும் ஒரு குடும்பத்தின் ஒரே இரவின் அனுபவத்தை மையமாக கொண்டு இயக்குநர் சோமீதரன் படத்தை உருவாக்கியுள்ளார். தொடக்கத்தில் குடும்ப உணர்வுகளுடன் அமைதியாக நகரும் கதை, ராணுவம் வீட்டுக்குள் நுழையும் தருணத்திலிருந்து முழுவதும் பதட்டமான திரைக்கதையாக மாறுகிறது.

ஒரு இரவில் நடைபெறும் சம்பவங்களின் மூலம், போரின் மன அழுத்தத்தையும் அச்சத்தையும் மிக நெருக்கமாக பதிவு செய்துள்ளார். வசனங்கள் குறைவாக இருந்தாலும், இடையே வரும் சில வரிகள் போரின் கடுமையான உண்மையை நேரடியாகப் பதிவு செய்கின்றன. ஆனால், முதல் பாதியில் திரைக்கதை மெதுவாக நகர்வது ஒரு குறையாக தோன்றுகிறது.

செல்வரத்தினம் பிரதீபன் ஒளிப்பதிவு, போரின் பதட்டத்தையும் அந்த சூழலின் இயல்பையும் உயிரோட்டத்துடன் பதிவு செய்கிறது. கே-யின் இசை காட்சிகளுடன் கலந்துகொண்டு, மனதில் நீண்ட நேரம் நிற்கும் கனமான உணர்வை உருவாக்குகிறது.