‘தலைவர்-173’ படம் குறித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சு !
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யாவிடம், ‘ரஜினியும் கமலும் இணைந்து நடிப்பதாக செய்திகள் வருகின்றதே, அதுகுறித்து உங்களின் கருத்து என்ன?’ என முன்பு கேட்கப்பட்டது. அதற்கு சௌந்தர்யா, ‘இதுகுறித்து தலைவர் சொல்ல வேண்டிய நேரத்தில் சரியாக சொல்லுவார்’ என கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் ‘வித் லவ்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சௌந்தர்யாவிடம், ‘ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்கப்போகிறாரா? படப்பிடிப்பு இந்தாண்டு துவங்குமா? என கேட்கப்பட்டது. அதற்கு அவர்,
‘இப்படம் குறித்து விரிவான தகவலை படக்குழு அறிவிப்பார்கள். தற்போது பேச்சுவார்த்தை போய்க்கொண்டு இருக்கின்றது. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வரும். நான் அப்படத்தில் பணியாற்றவில்லை’ என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை முதலில் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக சொல்லப்பட்டது. அதன் பிறகு இருவரும் ஆக்சன் படம் வேண்டாம், பக்காவான கமர்ஷியல் லைட் ஹார்ட்டட் படத்தில் நடிக்கலாம் என்ற முடிவை ரஜினியும் கமலும் எடுத்திருக்கின்றனர். அதன்படி, இயக்குநரை தேர்ந்தெடுக்கும் பணியில் இருந்த நிலையில், இவர்கள் தற்போது நெல்சனை தேர்ந்தெடுத்து இருப்பதாக செய்திகள் வருகின்றன.
தற்போது நெல்சன் ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் நிறைவுபெற்று, ஜூன் அல்லது ஆகஸ்டில் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிவுற்றதும் ரஜினி தனது ‘தலைவர்-173’ படப்பிடிப்பில் இணைகிறார். இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.


