சிவகார்த்திகேயன் – வெங்கட்பிரபு அமெரிக்கா பயணம்: காரணம் என்ன?
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படமும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படமும் பொங்கலை முன்னிட்டு களத்தில் இறங்குகின்றன.
‘பராசக்தி’ படத்துக்கு பிறகு சிபி சக்கரவர்த்தி மற்றும் வெங்கட்பிரபு ஆகியோர் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் எஸ்கே. இதில் எந்தப் படம் முதல் தொடங்கும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
தற்போது வெங்கட்பிரபு படத்துக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். அமெரிக்காவில் உள்ள லோலா வி.எஃப்.எக்ஸ் நிறுவனத்துக்கு இருவரும் சென்றிருக்கிறார்கள். உடல் முழுக்க ஸ்கேன் செய்வது மற்றும் முகத்தை ஸ்கேன் செய்வது என அந்நிறுவனம் ஹாலிவுட்டில் மிகவும் பிரபலம். இதனை வைத்து ஒரே கதாபாத்திரத்தினை பல்வேறு கதாபாத்திர வடிவமைப்புகளாக மாற்றலாம். இந்த தொழில் நுட்பத்தை வைத்து ‘கோட்’ படத்தை உருவாக்கினார் வெங்கட்பிரபு.
அதே தொழில் நுட்பத்தை முன்வைத்தே சிவகார்த்திகேயன் படத்தையும் உருவாக்கவுள்ளார் வெங்கட்பிரபு. இப்படமும் கிராபிக்ஸ் தொழில்நுட்ப ரீதியில் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறார். சயின்ஸ் பிக்சன் மற்றும் டைம் டிராவல் பாணியிலான கதையொன்றை சிவகார்த்திகேயனிடம் கூறியுள்ளார் வெங்கட்பிரபு. இந்த படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.


