சிக்கந்தர் தோல்வி.. ஏ.ஆர்.முருகதாஸை குறை சொன்ன ராஷ்மினா
கோலிவுட் கடந்து பாலிவுட்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படம் கலவையான விமர்னங்களை பெற்றது.
இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்த இந்தி படம், ‘சிக்கந்தர்’. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்தார். சத்யராஜ், சர்மான் ஜோஷி உள்பட பலர் நடித்த இப்படம் கடந்த வருடம் வெளியானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகி, வணிகரீதியாகத் தோல்வியைத் தழுவியது.
இப்படத்தின் தோல்விக்கு சல்மான்கான் படப்பிடிப்புக்குத் தாமதமாக வந்ததும் காரணம் என ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருந்தார். அதற்கு சல்மான் கான் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா தெரிவிக்கையில், ‘சிக்கந்தர் கதை பற்றி முருகதாஸ் சாருடன் பேசியது நினைவிருக்கிறது. அந்தக்கதை உண்மையில் முற்றிலும் சுவாரஸ்யமாகவும் மாறுபட்டதாகவும் இருந்தது. பிறகு படப்பிடிப்பில் நடந்தவை வித்தியாசமாக இருந்தன.
பொதுவாக சில படங்களில் அப்படித்தான் நடக்கும். ஒரு கதையைக் கேட்கும்போது, அது ஒன்றாக இருக்கும். திரைப்படமாக உருவாகும் காலகட்டத்தில், நடிகர்களின் நடிப்புக்கு ஏற்ப, படத்தொகுப்புக்கு ஏற்ப, பல விஷங்கள் மாறும். அது சினிமாவில் சகஜம்தான். ‘சிக்கந்தர்’ படத்திலும் அது நடந்தது’ என கூறியுள்ளார்.


