‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துவிட்டு ஜெயிலர்- 2 படப்பிடிப்பில் உள்ளார். அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அதனையடுத்து கமலுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதனை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
சுமார் 40 வருடங்களாக ரஜினி-கமல் சேர்ந்து நடிக்கவில்லை. அவர்களை சேர்த்து நடிக்க வைப்பதற்கான முயற்சிகளை யாரும் மேற்கொள்ளவில்லை என தெரிகிறது.
இப்போது இரண்டு பேருமே தங்களது திரைப் பயணத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார்கள். எனவே, அவர்களை சேர்த்து நடிக்க வைத்துவிடுங்கள் என படைப்பாளிகளுக்கு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வந்தார்கள்.
இந்நிலையில், தலைவர்-173 படத்தை இளம் இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. ‘இந்த படம் கண்டிப்பாக அனைவருக்கும் திருப்தியை தரும்’ என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் சிபி. இதற்கு பிறகு ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் படம் தொடங்குகிறது. இந்த இரு படங்களும் ஆக்சன் கதைக்களத்தில் இருந்து விலகி, ஃபீல் குட் மூவியாக உருவாகவுள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.


