தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்!
வரலட்சுமி சரத்குமார் ‘சரஸ்வதி’ என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.
இந்நிலையில் தமிழில், 180, மாலினி 22 பாளையங்கோட்டை, காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம் உள்பட பல படங்களில் நடித்திருப்பவர், நித்யா மேனன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்து வருகிறார்.
‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். இதனைத் தொடர்ந்து மீண்டும் தனுஷுடன் ‘ இட்லி கடை’ படத்தில் இணைந்து நடித்தார்.
இப்போது தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இவர், தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘கியூரி புரொடக் ஷன்’ என பெயர் வைத்துள்ளார்.
‘நான் நடிக்கத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இது எனது நோக்கமாக இருந்து வருகிறது. இப்போது ஒரு தயாரிப்பாளராக, நான் அதே நோக்கத்துடன் தொடர்வேன். நான் தயாரிக்கும் படங்கள் மூலம் பார்வையாளர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துவதே எனது குறிக்கோள்’ என கூறியுள்ள அவர், தனது முதல் தெலுங்கு படமான ‘ஆலா மொதலிந்தி’யின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். கியூரி புரொக்டஷன்ஸ் என்னென்ன படங்கள் தயாரிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


