சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து?
சூர்யா தற்போது ‘கருப்பு’ படத்தை முடித்து விட்டு வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜீத்து மாதவன் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் தொடரும் அவரது அடுத்த பட அப்டேட்ஸ் பார்ப்போம்..
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. சிம்பு நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், எப்போது படப்பிடிப்பு தொடங்கும் உள்ளிட்டவை முடிவாகவில்லை.
இதனிடையே, சிம்பு படத்தினை முடித்துவிட்டு, சூர்யா படத்தை இயக்கவுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. இது தொடர்பான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
ரஜினியை சந்தித்து கூறிய கதையை சூர்யாவுக்கு தகுந்தாற் போல் மாற்றி கூறியிருக்கிறார் அஸ்வத். சூர்யாவுக்கு கதை மிகவும் பிடித்துவிடவே, அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட கதை விவாதத்தில் இந்தக் கூட்டணி முடிவாகும் என கூறப்படுகிறது.
சூர்யா, அஸ்வத் மாரிமுத்து படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதா அல்லது சூர்யாவே தயாரிக்கவுள்ளாரா என்பது விரைவில் தெரியவரும். தற்போது அவர், ‘சூர்யா 46’ படத்தை முடித்து ‘சூர்யா 47’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஆகையால் ‘சூர்யா 48’ பட இயக்குநராக அஸ்வத் இருக்க வாய்ப்புகள் அதிகம் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.


