தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித் குமார். சமீபத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் படைத்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அஜித் குறித்து பல திரை பிரபலங்கள் அவ்வப்போது தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவருடன் பணியாற்றிய அனுபவங்களை அவர்கள் மனம் திறந்து பேசி வருகின்றனர். அந்த வகையில், பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர், அஜித்துடன் பணியாற்றிய தனது அனுபவத்தை சமீபத்தில் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.
பாபா பாஸ்கர் பேசுகையில், “நான் அஜித்துடன் குரூப் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியிருக்கிறேன். ‘ஏகன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஃப்ரீடம்’ பாடலுக்கு மட்டுமே நான் நடனம் அமைத்தேன். அவரைப் போன்ற ஒரு வெளிப்படையான மனிதரை பார்க்கவே முடியாது. அவர் மிகவும் ஓப்பனாக பழகுவார். கோபம் வந்தால் கடுமையாக திட்டுவார், அதே சமயத்தில் பாசம் காட்டினால் தலைமேல் வைத்து கொண்டாடுவார். குறிப்பாக உணவு விஷயத்தில் படக்குழுவினரையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் அவர் கவனித்துக் கொள்ளும் விதம் இருக்கிறதே, அது அவரை ஒரு சின்ன எம்.ஜி.ஆர் போல காட்டுகிறது” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பாபா பாஸ்கரின் இந்த புகழாரம் அஜித் ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஜித்தின் எளிமை, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பு ஆகியவை மீண்டும் ஒருமுறை பலராலும் பேசப்படுகிறது. எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு பாபா பாஸ்கர் பேசிய இந்த கருத்து, அஜித்தின் பெருந்தன்மையையும், சக கலைஞர்கள் மீதான அவரது அக்கறையையும் வெளிப்படுத்துகிறது.
