என் திரைவாழ்வில் புதிய முயற்சி: நடிகர் பாபி சிம்ஹா மகிழ்ச்சி
நீண்ட இடைவெளிக்கு பிறகு தனக்கான கதையை தேர்ந்தெடுத்துள்ளார் பாபி சிம்ஹா. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்..
பாபி சிம்ஹா, ஹெபா படேல் நாயகன்-நாயகியாக நடிக்கும் படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. பெயரிடப்படாத இப்படத்துக்கு ஜே.கிருஷ்ணா தாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். சித்தார்த் சதாசிவுனி இசையமைக்கிறார்.
யுவா புரொடக் ஷன்ஸ் சார்பில் யுவா கிருஷ்ணா தொலாட்டி தயாரிக்கும் இப்படத்தை மெஹர் யாரமாட்டி இயக்குகிறார். தணிகலபரணி, சூர்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் பூஜை நடைபெற்றது.
இப்படம் பற்றி பாபி சிம்ஹா தெரிவிக்கையில், ‘தெலுங்கில் நேரடியாக ஒரு படத்தில் நாயகனாக நடிக்க வேண்டும் என நினைத்தபோது பல கதைகளைக் கேட்டேன். ஒரு நல்ல கதைக்காகக் காத்திருந்த நேரத்தில் யுவா எனக்கு அழைப்பு கொடுத்தார்.
கதையைக் கேட்டதும் மிகவும் பிடித்தது. இது, நடிகனாக எனக்குச் சவாலான கதை. உடனடியாக ஒப்புக்கொண்டேன். என் திரை வாழ்க்கையில் இது புதிய முயற்சி. வருகிற 22-ந்தேதி முதல் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது’ என கூறியுள்ளார்.


