இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல தம்பதிகள். இவர்களுக்கு தற்போது இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகும், நயன்தாரா கதாநாயகி மையப்படங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘எல்.ஐ.கே.’ படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து, தனது மனைவி நயன்தாரா குறித்து அவர் அளித்த பேட்டி கவனம் பெற்றுள்ளது.
அந்த பேட்டியில் விக்னேஷ் சிவன் கூறியதாவது: “எங்கள் காதல் இன்னும் கவிதை மாதிரி அழகாக தான் இருக்கிறது. நான் எந்த பாடல் எழுதினாலும் முதலில் நயன்தாராவுக்கு தான் அனுப்புவேன். அவர் அதை படித்து, தேவதை மற்றும் இதயம் எமோஜி அனுப்புவார். அதற்குப் பிறகுதான் அந்த பாடலை இசையமைப்பாளர்களிடம் பகிர்வேன்.
நாங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நேரத்திலும் கூட, நான் பாடலை அனுப்பினால் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு ரியாக்ட் பண்ணுவார். எல்லா மனைவிகளை போலவே, நயன்தாராவுக்கும் கோபம் வந்தால் கொஞ்சம் ‘பயங்கரம்’ தான். ஆனால் அதே நேரத்தில், அவரைப் போல இனிமையான, மென்மையான மனிதர் வேறு யாரும் இல்லை.
எங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டு காரில் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். வாழ்க்கை இப்போது ரொம்ப அழகாக இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டி, இவர்களின் காதல் வாழ்க்கையின் இனிமையான பக்கத்தை ரசிகர்களிடம் வெளிப்படுத்தியுள்ளது.

