ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ்
ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல் படமாக ‘ஜனநாயகன்’ உருவாகியுள்ளது. விஜய் அரசியலில் இறங்கியுள்ள நிலையில் இப்படம், அவருடைய கடைசி படமாக இருக்குமென கூறப்படுகிறது.
கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள ஜனநாயகனில் மமிதா பைஜு, பாபி தியோல், பூஜா ஹெக்டே, நாசர், பிரகாஷ்ராஜ், கெளதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருக்கின்றனர். இப்படம் இன்னமும் திரையரங்குகளில் ரிலீசாகாத நிலையில், தவெக நிர்வாகி அருண் ராஜ் ‘ஜனநாயகன்’ அப்டேட் கொடுத்துள்ளார்.
ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண் ராஜ் விருப்ப ஒய்வு பெற்றுவிட்டு விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார். தவெகவின் கொள்கை பரப்பு செயலாளராக உள்ள இவர், கட்சி பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையில் இவர் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐ.ஆர்.எஸ் அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர், ஜனநாயகன் படத்தின் வாயிலாக நடிகராகவும் மாறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், ‘என்னை ஜனநாயகன் படத்தில் நடிக்க வைத்ததே விஜய் தான். நடிக்க ஆசையாக இருப்பதாக அவரிடம் கூறினேன். இதனையடுத்து தன்னுடைய கடைசி படத்தில் என்னை நடிக்க வைத்தார் விஜய். ஒருநாள் முழுவதும் ஜனநாயகன் படப்பிடிப்பில் நான் பங்கேற்றேன்’ என தவெக நிர்வாகி அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.


