Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

யாதும் ஊரே யாவரும் கேளிர் திரை விமர்சனம்

yaadhum-oore-yaavarum-kelir movie review

இசையில் அதிக ஆர்வம் உள்ளவராக இருக்கும் விஜய் சேதுபதி, சிங்கள ராணுவ தாக்குதலில் தப்பி அகதியாக இந்தியா வருகிறார். அதன்பின்னர் கேரளாவில் இசைக்கருவிகள் விற்பனை செய்யும் கடையில் வேலைக்கு சேர்கிறார். ஒரு கட்டத்தில் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லாமல் தமிழகத்துக்கு வரும்போது அவரை போலீஸ் கைது செய்கிறது. போலீஸ் லாக்கப்பில் இருக்கும் விஜய் சேதுபதிக்கு இன்னொரு இலங்கை தமிழரான கரு. பழனியப்பன், கிருபாநிதி என்ற பெயரையும் அதற்குரிய ஆவணங்களையும் கொடுத்து அந்த பெயரில் அகதி முகாமில் தங்க அரசுக்கு விண்ணப்பிக்கும்படி கூறுகிறார்.

இதுவே விஜய் சேதுபதிக்கு ஆபத்தாக மாறுகிறது. போலீஸ் அதிகாரியான மகிழ் திருமேனி விஜய் சேதுபதியை தீர்த்து கட்ட தேடி அலைகிறார். மறுபுறம் ஒரு தலையாக விஜய் சேதுபதியை காதலிக்கும் மேகா ஆகாஷ் அவரை லண்டன் இசைப்போட்டியில் பங்கேற்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இறுதியில் மேகா ஆகாஷின் ஆசை நிறைவேறியதா? கிருபாநிதி யார்? எதற்காக மகிழ் திருமேனி விஜய்சேதுபதியை கொலை செய்ய துடிக்கிறார்? லண்டன் இசை போட்டியில் பங்கேற்க நினைக்கும் விஜய் சேதுபதியின் ஆசை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. இலங்கை அகதியாக நடித்திருக்கும் விஜய்சேதுபதிக்கு அழுத்தமான கதாபாத்திரம்.

இதனை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுக்களை பெறுகிறார். அன்பான பேச்சு, சாந்தமான முகம், சத்தங்களை கேட்டு நிலை குலைதல், தனக்குரிய அடையாளம் தேடி அலைதல் என்று நடிப்பில் வித்யாசங்கள் காட்டி கைத்தட்டல் பெறுகிறார். இசை அரங்கில் அகதிகளின் துயரங்களை வெளிப்படுத்தும் இடங்களில் கண்கலங்க வைக்கிறார். மேகா ஆகாஷ் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். போலீஸ் அதிகாரியாக வரும் மகிழ் திருமேனி, விஜய் சேதுபதியை கொல்ல வெறித்தனம் காட்டும் இடங்களில் மிரட்டுகிறார். படத்தில் சிறிது நேரம் வந்தாலும் சின்னி ஜெயந்த் கவனிக்க வைக்கிறார்.

மறைந்த நடிகர் விவேக் குணசித்திர நடிப்பால் கவனம் பெறுகிறார். மோகன்ராஜா, கரு.பழனியப்பன், ராஜேஷ், கனிகா, தபியா மதுரா, ரித்விகா, இமான் அண்ணாச்சி, அஜய்ரத்னம், சம்பத்ராம் உள்ளிட்ட பலரும் நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். தம்பி சேகர் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ரகுஆதித்யா கொடுத்த வேலையை சிறப்பாக செய்து கவனத்தை பெற்றிருக்கிறார். இலங்கை தமிழ் அகதிகளின் வாழ்வியலையும் போராட்ட வலிகளையும் திரையில் கொண்டு வந்து பாராட்டுக்களை பெறுகிறார் இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். படத்தின் ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் பிற்பகுதி கதையை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறது. திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை கூடுதல் பலம். காட்சிகளின் மூலம் கதைக்களத்திற்கு கொண்டு செல்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றி வேல் மகேந்திரன் கேமரா யுத்த களம், கடல், காடுகள், நகரம் என்று பல இடங்களில் சுழன்றுள்ளது. மொத்தத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர் – சிறந்த படைப்பு.

yaadhum-oore-yaavarum-kelir movie review
yaadhum-oore-yaavarum-kelir movie review